கள்ளசாராயம் விற்றவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கலாமா?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
- கள்ளசாராயம் விற்றவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கலாமா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள், புதிய உறுப்பினர் சேர்க்கைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
69 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி யார் பெற்று கொடுத்தார்கள். அது போன்று தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அம்மாவின் அரசாகும்.
முதல் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடி வாசலுக்கு நேரடியாக வந்து துள்ளி வருகிற காளையை அங்கே வணங்கி பச்சைக்கொடி அசைத்து அதை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு.
அ.தி.மு.க.விற்கு 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கிற அந்த பணியையும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற அந்த பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற அந்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.
கள்ளச்சாராயம் என்பது இந்தியாவிலே எங்கும் இல்லாத நிலையில் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு அவலம் உள்ளது.
கள்ளசாரயம் விற்பனை செய்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப் பட்டிருக்கிற அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படி கொடுப்பது முறையான நிர்வாகமா?.
நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.