உள்ளூர் செய்திகள்

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தம்பியை வெட்டிய அண்ணன் கைது

Published On 2023-04-24 08:21 GMT   |   Update On 2023-04-24 08:21 GMT
  • கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தம்பியை வெட்டிய அண்ணன் கைது
  • தனது தம்பியின் செயலால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கருதினார்.

மதுரை

மதுரை விளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தெரியவந்ததும் வெங்கடேசை, அவரது அண்ணன் வினோத்குமார் கண்டித்தார். அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறில் ஈடுபட்ட இருவரையும், அவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவர்மீது வினோத்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

தம்பி வெங்கடேசனின் செயலால் தனது குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அவர் கருதினார். இதனால் வினோத்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தம்பியை தேடிச்சென்றார். அப்போது காளவாசல் பகுதியில் வெங்கடேஷ் இருந்தார். அவருடன் வினோத்குமார், தன்னிடம் இருந்த அரிவாளால் வெங்கடேசை வெட்டினார்.

இதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். படுகாயமடைந்த வெங்கடேசை, அவரது உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெங்கடேசை அவரது அண்ணன் வெட்டியது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வினோத்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News