உள்ளூர் செய்திகள்

கோவிலூர் மயானம் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவிலூர் மயானம் ஆக்கிரமிப்பு:கோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு

Published On 2023-03-15 12:04 IST   |   Update On 2023-03-19 07:44:00 IST
  • மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
  • கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா ஆகியோர் கோவிலூர் மயானப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் பகுதியில் பொது பயன்பாட்டில் உள்ள மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இறப்புகள் நிகழும்போது போலீசார் பாதுகாப்புடனே உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

மின் வாரியம் அமைந்துள்ள பகுதியில் மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு வருவதாகவும் மின் மயானத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி அமர்வு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மின் பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா ஆகியோர் கோவிலூர் மயானப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் பல ஆண்டுகளாக மயானம் செயல்பட்டு வந்த இடத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்த நிலையில் ஒரு சிலரின் தூண்டுதலால் மயானத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. இதனை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இந்த நிலையில் மயான ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரே அதன் முடிவு தெரியும் என்பதால் பொதுமக்கள் அதனை எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

Similar News