உள்ளூர் செய்திகள்

குப்பையில் இருந்து தயாராகும் இயற்கை உரத்தை வாங்க கோத்தகிரி விவசாயிகள் ஆர்வம்

Published On 2023-05-25 09:04 GMT   |   Update On 2023-05-25 09:04 GMT
  • கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
  • தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம்.

அரவேனு,

கோத்தகிரி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா உள்ளது. இது 4½ ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பேரூராட்சியின் 21 வார்டுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

அதன்பிறகு இங்கு மக்கும்- மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை உரம், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறுகையில், கோத்தகிரி நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யபட்டு அங்கு தற்போது 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கு முன்பு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம். எனவே தேவைப்படும் விவசாயிகள் இயற்கை உரம் வாங்கி பயன் பெறலாம் என்றனர்

Tags:    

Similar News