புகழூர் நகராட்சி கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- புகழூர் நகராட்சி கூட்டத்தில் அறிவு சார் மையம், கேமிராக்கள் அமைத்தல் உள்ளிட்ட 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணை தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார் . நகராட்சி ஆணையர் பால்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் பேசும்போது,நகராட்சியில் குற்றங்களை தடுக்கும் வகையில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் 42 இடங்களில் 120 கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. அதேபோல் பாண்டிபாளையத்தில் திறந்த வெளியில் உள்ள கிணற்றுக்கு தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. நகராட்சியில் சுகாதாரத்தை பேணும் வகையில் 3 பொதுக்கழிப்பிடம் கட்டவும், கூலகவுண்டனூர், காந்திநகர் உட்பட 3 இடங்களில் அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. நகராட்சி முழுவதும் சாக்கடை பிரச்சனை குடிநீர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும். நகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில் புதிய வணிக வளாகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை கண்காணித்து அதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் மலர்கொடி, நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.