கழிவு நீர் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
- புகழூர் நகராட்சியில் கழிவு நீர் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
- நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் செப்டிக் டேங்க் கிளீன் செய்வதற்கு நகராட்சி அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி பொறியாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் வள்ளிமுத்து வரவேற்றார். கூட்டத்தில், மனித கழிவுகளை மனிதனே அகற்ற அனுமதிக்க கூடாது. செப்டிக் டேங்க் கழிவுநீர் இயந்திரங்களை உபயோகப்படுத்தி மட்டுமே செப்டிக் டேங்க் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனத்தின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களின் முழு விவரம் அறிந்து வைத்திருக்க வேண்டும். கழிவு நீர் வண்டியில் உள்ள கழிவுகளை பொது இடங்க ளில் ஏரி வாய்க்கால் ,குளங்களிலோ திறந்து விடக்கூடாது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் வீடு ,வணிக வளாகம் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே பணியை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு தகவல்களுக்கு நகராட்சியின் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 14420 என்ற எண்ணை பயன்படுத்துமாறு நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், மண்டப உரிமையாளர்கள், வணிகப் பெருமக்கள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.