மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 8-ம் கொடை விழா நாளை மறுநாள் நடக்கிறது
- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
- மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டேந்தி சரணகோஷத்துடன் தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
இங்கு கடந்த 5 ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 14-ந்தேதி வரை பத்து நாட்கள் மாசிக் கொடை விழா நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் எட்டாம் கொடை விழா நடக்கிறது. காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை யொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
விழாவின் தொடர்ச்சியாக 25-ந்தேதி மீனபரணி கொடைவிழா நடக்கிறது.