ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி - மனைவியை பார்க்க சென்றபோது பரிதாபம்
- மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலை அருகே வரும்போது செல்வன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்
- மரிய ரேகா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி:
கல்குளத்தை அடுத்த பறப்பற்று எள்ளூவிளையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் செல்வன் (வயது 36), கொத்தனார். இவருக்கும் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த மரிய ரேகா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் தாயார் வீட்டுக்கு மரிய ரேகா சென்றார். கடந்த 3-ந்தேதி மாலையில் மனைவியை அழைத்து செல்ல செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலை அருகே வரும்போது செல்வன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செல்வன் இன்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மரிய ரேகா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விழுந்தாரா? அல்லது வாகனம் ஏதும் மோதியதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.