உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

Published On 2023-10-17 07:05 GMT   |   Update On 2023-10-17 07:05 GMT
  • நாகர்கோவிலில் வருகிற 31-ந்தேதி நடக்கிறது
  • மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நடக்கிறது

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகளாக பள்ளிகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் ஆகியவையும், கல்லூரிகளுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு 3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News