உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா

Published On 2023-11-27 06:28 GMT   |   Update On 2023-11-27 06:28 GMT
  • முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடந்தது
  • பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், பின்னர் அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சியும் நடந்தது.

கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அம்மன் வாகனம் வரும்போது அங்குள்ள முத்தாரம்மன் கோவில் முன்பு வைத்து வாகனத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்ம னுக்கும், முத்தாரம்மனுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்ட னர்.

அதன்பிறகு 10.30 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நள்ளிரவு 11.30 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், திருக்கார்த்திகை மண்ட கப்படி கட்டளைதாரர்கள் பாலன், மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News