உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தூய்மை பாரதத்தை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

Published On 2022-06-06 10:35 GMT   |   Update On 2022-06-06 13:35 GMT
  • கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
  • இவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கன்னியாகுமரி:

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் உன்னி (வயது 58). ஆடிட்டர். இவர் சீடு குருகுலம் சார்பில் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி அவர் கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடத்தில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

அங்கு உள்ள பாரத மாதா சிலைக்கு மலர் தூவி வணங்கினார். அதைத் தொடர்ந்து ராமர் லட்சுமணர் சீதை சிலைகளுக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் சித்திரக் கண்காட்சி கூடம் முன்பு உள்ள 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வணங்கினார்.

அதைத் தொடர்ந்து சைக்கிள் பயணத்தை கன்னியா குமரி விவே கானந்த கேந்திர தலை வர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவே கானந்த கேந்திர மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் நாயர், கேந்திர பொறுப்பாளர் சுனில் ராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்ட கோவிந்தன் உன்னி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி சென்றடைகிறார். மொத்தமுள்ள 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர் 48 நாட்களில் சைக்கி ளில் கடந்து செல்கிறார்.

இவர் நாள்ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017- ம் ஆண்டு சபரி மலைக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி, சென்னை வழியாக மீண்டும் பாலக்காடு சென்றடையும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அப்போது இவர் மொத்தம் உள்ள 1860 கிலோ மீட்டர் தூரத்தை 28 நாட்களில் சைக்கிளில் கடந்து சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் இந்த முறை சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் இருந்து தலா ஒரு ரூபாய் வீதம் மொத்தம் ரூ 22 ஆயிரம் வசூல் செய்து சைக்கிள் விலைக்கு வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News