சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம்
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆவணித் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுஜித நம்பூதிரி கொடியேற்றினார். தொடர்ந்து ஆகம விதிப்படியான பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் வாகன பவனி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
9-ம் நாள் விழாவான நேற்று மாலை 5.15 மணிக்கு விஷ்ணு சுவாமி, ஸ்ரீ தேவி, பூதேவியுடன் தம்பதி சமேதராக நேரில் எழுந்தருளினார். கடந்த சில மாதங்களாக ரூ.12 லட்சம் செலவில் புதிய தேவேந்திரன் தேர் செய்யப்பட்டு வந்தது. இதன் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக நடந்து வந்தது. நேற்று காலையில் நிறைவடைந்த புதிய தேரில் பாகங்கள் பொருத்தும் பணி நடந்தது.
மாலையில் பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். இன்று இரவு கோவில் தெப்ப குளத்தில் ஆறாட்டு வைபவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.