கொல்லங்கோடு நகராட்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் நகை பறிப்பு
- பிளஸ்சி (வயது 33) தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்
- மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
நாகர்கோவில் :
கொல்லங்கோடு அருகே தமிழக கேரளா எல்லை பகுதியான பழைய உச்சக்கடை பகுதியை சேர்ந்தவர் சிபு. இவரது மனைவி பிளஸ்சி (வயது 33) தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் கொல்லங்கோடு நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை வீடு கொல்லங்கோடு ஒழுவாறத்தலை பகுதியில் உள்ளது.இவர் நேற்று மாலை வேலை முடித்துவிட்டு தந்தை வீட்டிற்கு செல்வதற்காக கச்சேரிநடை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவன் தாலி செயினை பறித்தனர். உடனே அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இது குறித்து பிளஸ்சி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகிறார்கள்.