ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் முற்றுகை
- போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 22 பேர் மீது வழக்கு
- சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தல்
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 67). விவசாயியான இவர் தனது மாடுகளை அருகில் உள்ள தென்னந்தோப்பில் மேய்த்து வருவது வழக்கம். இதில் சிலரது தென்னை மரக்கன்றுகளை மாடுகள் கடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை யடுத்து தோட்டக்காரர்கள் ஈத்தாமொழி பூமி பாதுகாப்பு சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் பூமி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சந்திரனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனை செலுத்திய சந்திர னை பின்னர் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சந்திரன் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சி நிர்வாகி திருமாவேந்தன் தலைமையில், மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட நிர்வாகிகள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விடுதலை சிறுத்தை கட்சியினர் 2 பெண்கள் உட்பட 22 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.