உள்ளூர் செய்திகள்

இஞ்சி இடுப்பழகி... பாட்டுப்பாடி அசத்திய பெண் கவுன்சிலர்கள்

Published On 2022-09-11 09:30 GMT   |   Update On 2022-09-11 09:30 GMT
  • பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
  • நிகழ்ச்சி இன்றும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

கோவை,

கோவை மாநகராட்சி - ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் இணைந்து பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் மக்களுக்கான பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

உக்கடம் பெரியகுளத்தில் ஆல் இன் ஆல் அங்காடி என்ற பெயரில் பொருட்காட்சி நேற்று நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சி இன்றும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கான அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மின்சார உபகரணங்கள், சமையல் பொருட்கள், உணவு பொருட்கள், தின்பண்டங்கள் ஆகிய அனைத்து விதமான பொருட்களும் விற்ப னைக்கு உள்ளன.

இத்துடன் பொழுது போக்கு நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு க்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் படகு சவாரிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிலையில் நேற்று இரவு வாலங்குளம் பாலத்திற்கு கீழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசைக்குழுவினர் இசைவிருந்தை அளித்தனர். இதில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் இருந்த இசைக்குழுவினர் மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகுவை மேடைக்கு அழைத்து பாட கூறினர். ஆனால் அவர் மறுத்து விட்டார். உடனே அங்கு கூடி இருந்த பொதுமக்கள் அவரை மேடை ஏறி பாடும் படி கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர் மேடை ஏறி பாட்டு பாடி அசத்தினார். அவருடன் பணிக் குழுத் தலைவா் சாந்தி முருகன், வரி குழு தலைவர் முபசீரா, கவுன்சிலர்கள் வித்தியா ராமன், உமா விஜயகுமார் ஆகியோரும் சேர்ந்து பாட்டு பாடினர். அவர்களின் பாட்டை கேட்டு அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர்.

தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன்- ரேவதி ஜோடியாக பாடும் இஞ்சி இடுப்பழகி பாடலை பெண் கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து பாட அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். 

Tags:    

Similar News