உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் சரயு வழங்கிய போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11,329 பேருக்கு ரூ.20.11 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை

Published On 2023-10-01 10:35 GMT   |   Update On 2023-10-01 10:35 GMT
  • கிருஷ்ணகிரியில் 11.329 பேருக்கு ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • முதல் அமைச்சரின் வரிவான மருத்துவ காப்பீட்டில் வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜன திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 11 லட்சத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

நிறைவு விழா

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின், 5-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள், சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம், 11,329 பயனாளிகளுக்கு, 20.11 கோடி ரூபாய் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 குடும்பங்கள், பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் ரேஷன், ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட ஆண்டு வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக, அறை எண்.32 -ல் செயல்படும் மையத்தை அணுகி இணையத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டு சான்றிதழ்கள்

தொடர்ந்து, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த, 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளும், சிறப்பாக செயல்பட்ட தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை, உமாராணி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய தனியார் மருத்துவமனை, 5 வார்டு மேலாளர்கள், 5 தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.மேலும் பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட,10 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர்கள் இளந்தரியன், சையத்அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News