காதலியை திருமணம் செய்வதாக குடும்பம் நடத்தி ஏமாற்றிய என்ஜினியரிங் பட்டதாரி கைது
- இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்து கணவன்-மனைவி போன்று குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- பாலமுருகனுக்கு, அவரது வீட்டில் திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை கிராமம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 26) ஆண்டிமடம் விளந்தை தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர்கள் இருவரும் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் ஒன்றாக படித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் திருச்சியில் வெவ்வேறு கல்லூரிகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தனர். அப்போதும் இருவரும் பழகி வந்தனர். பின்னர் படிப்பு முடிந்து வேலை தேடி சென்னை சென்றனர்.
அங்கு இரு வேறு நிறுவனங்களில் தமிழ்செல்வியும், பாலமுருகனும் வேலை பார்த்து வந்தனர்.
ஆனால் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்து கணவன்-மனைவி போன்று குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாலமுருகனுக்கு, அவரது வீட்டில் திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினர். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார் மேலும் காதலி தமிழ் செல்வியிடம் நான் பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் நீயும் வேறு பையனை திருமணம் செய்து கொண்டு போய்விடு என தெரிவித்து விட்டு சென்றுவிட்டார்.
இதைக் கேட்டு தமி ழ்ச்செல்வி அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பாலமுருகனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.