உள்ளூர் செய்திகள்

ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

Published On 2023-05-17 08:46 GMT   |   Update On 2023-05-17 08:46 GMT
  • ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.
  • ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

 ஓசூர்,

ஓசூர் வனக்கோட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓசூர் வனக்கோட்டத்தில், காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி பகுதியில் ஏராளமான யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில், ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.

இந்த தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 40 வனக்காவல் சுற்று பீட்டுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து வந்த உயிரியலாளர் சக்திவேல் மூலம், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாள்களுக்கு, ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பணியில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வழிகாட்ட ஏதுவாக, வாட்ஸ் அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு, முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் இன்று முதல் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

Tags:    

Similar News