1-ந் தேதி முதல் குடிநீர் கட்டண அட்டை முறை ரத்து
- யு.பி.ஐ. கியூஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தியுள்ளது. இந்த இணைய வழியிலான கட்டண நுழைவு வாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம்.
மேலும் யு.பி.ஐ. கியூஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தெரிந்து கொள்ளவும், பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும் வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்.
ஏற்கனவே நுகர்வோர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதிதாக நுகர்வோர் அட்டை வழங்கப்பட மாட்டாது. மேலும் ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்கான எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.