உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே 3 வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது

Published On 2025-02-16 10:57 IST   |   Update On 2025-02-16 10:57:00 IST
  • முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
  • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

முத்துராமன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் மற்றும் மனைவியின் மொபட் ஆகியவற்றை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள், மொபட், சைக்கிள் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த துரை (வயது 40) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட் ஆகியவற்றுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் முத்துராமனின் மனைவி மகளிர் சுய உதவிகுழுவில் தலைவியாக உள்ளார். அவரிடம் துரை தனது குடும்பத்தினருக்கு கடன் உதவி ஏற்பாடு செய்து தருமாறு கூறினார்.

அதற்கு அவர், கடன் வாங்கி கொடுத்தால், திருப்பி செலுத்தமாட்டீர்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரத்தில் துரை, முத்து ராமனின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கைதான துரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News