உள்ளூர் செய்திகள்

ஓசூர் மலைக்கோவில் பூங்காவை படத்தில் காணலாம்.

ஓசூர் மலைக்கோவிலில் சிறுவர் பூங்காவை மேம்படுத்தி, சீரமைக்க வேண்டும்

Published On 2023-08-18 08:36 GMT   |   Update On 2023-08-18 08:36 GMT
  • இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும், கர்நா டகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
  • பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மீது நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது 1,500 ஆண்டுகள் பழமையானசிவன் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடவும் வசதியாக மாநகராட்சி சார்பில் கோவில் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவிலிருந்து ஓசூர் நகரப் பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்க வசதியாகக் கண்காணிப்பு கோபுரமும், பைனாகுலரும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி பூங்கா பாழ்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வெடுக்க இருக்கை வசதிகள் இல்லை.

சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. மலை மீது இருந்த தடுப்பு சுவர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மீது நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தருணங்களில் லேசாக கால் தவறினாலும் பள்ளத்தில் விழும் நிலையுள்ளது. மேலும், பூங்காவுக்கு குழந்தைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையுள்ளது.

இதுதொடர்பாக ஓசூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில் ஓசூர் முதல் அத்திப்பள்ளி வரை உள்ள ஏராளமான தொழிற் சாலைகளில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் விடு முறை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க சந்திரசூடேஸ்வரர் கோவில் மற்றும் சிறுவர் பூங்காவுக்குவந்து செல்வது வழக்கம்.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா பாழ்பட்டுள்ளது. எனவே, பூங்காவைச் சீரமைத்து, முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பூங்காவில் கூடுதலாக பொழுது போக்கு வசதிகளுடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News