உள்ளூர் செய்திகள்

தற்காலிக செட்டில் படிக்கும் மாணவர்கள் மற்றும் காரை பெயர்ந்த நிலையில் மேற்கூரை.

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிட மேற்கூரை

Published On 2022-08-10 10:30 GMT   |   Update On 2022-08-10 10:30 GMT
  • பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
  • இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட மன்னிப்பள்ளம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.

இந்தப் பள்ளி கட்டப்பட்டு 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனை சரிவர பராமரிக்காததால் அதன் மேற்கூரை பள்ளியில் மாணவ- மாணவிகள் வகுப்பில் இருக்கும்போதே இடிந்து விழுந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்து தங்களது பெற்றோரிடம் சென்று கூறியதால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து வருவதால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டனர்.

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. அவர்களால் நீண்ட தூரம் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இந்த பள்ளி கட்டிடத்தை புதியதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கிராம மக்கள் சாலை மறியலிலும் செய்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பள்ளியை ஆய்வு செய்து புதிய கட்டிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் நூலகம் அமைத்து தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News