உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே வயிற்றில் எட்டி உதைத்ததால் 3 வயது வடமாநில குழந்தை மரணம்

Published On 2022-06-21 05:45 GMT   |   Update On 2022-06-21 05:45 GMT
  • கணவன், மனைவி 2 பேரும் தென்னை நார் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • குழந்தையை தேங்காய் தண்ணீர் குடிக்க கூறுமாறு தெரிவித்துள்ளனர்.

ஆனைமலை:

ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர் சிலிமா மேத்யூ. இவரது மனைவி சரஸ்வதி தேவி(32). இவர்களுக்கு ருபாலி(3) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சிலிமா மேத்யூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் அகிலாண்டபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தென்னை நார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று கணவன், மனைவி 2 பேரும் தென்னை நார் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தங்களது மகள் ருபாலிக்கு தேங்காய் சிரட்டையில் தேங்காய் தண்ணீர் கொடுத்து குடிக்க கூறினர். ஆனால் குழந்தை மறுத்தது.

இதையடுத்து, அவர்கள், அங்கு சூப்பர் வைசராக பணியாற்றிய ஜார்க்கண்டை சேர்ந்த சாந்து முகமது(28) என்பவரிடம் குழந்தையை தேங்காய் தண்ணீர் குடிக்க கூறுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தை மறுக்கவே அவர் குழந்தையை வயிற்றில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் கீழே விழுந்த சிறுமி மயங்கினார். அதிர்ச்சியான பெற்றோர் குழந்தையை தூக்கி ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது.

இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. முதலில் இறப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சூப்பர்வைசர் சாந்து முகமது தாக்கியதில் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாந்து முகமது மீது அஜாக்ரதையாக மரணம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று ஆனைமலை போலீசார் சாந்து முகமதுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News