கூடலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
- 16 வயது சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் பிரியதர்ஷன் (25) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரியதர்ஷன் சிறுமியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்தார்.
இதனால் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமானார். இது நாளடைவில் சிறுமியின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறினார்.பின்னர் இதுகுறித்து சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரியதர்ஷனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.