உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பீட்ரூட் விலை வீழ்ச்சி

Published On 2023-05-17 09:01 GMT   |   Update On 2023-05-17 09:01 GMT
  • தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.
  • மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.

அரவேணு,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

கோத்தகிரி சுற்றியுள்ள கூக்கல்தெரை, கக்குச்சி ,கூக்கல், கட்டப்பெட்டு, பில்லிக்கம்பை , தீனட்டி, மானியடா, நெடுகுளா போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது பண்படுத்தி மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, நூல் கோல், பீன்ஸ், பூண்டு, பட்டாணி, அவரை போன்ற மலை காய்கறிகளை விளைவித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மேலும் ஒரு சில விவசாயிகள் வெளிநாட்டு காய்கறிகளை சாகுபடி செய்து வருமானம் பெற்று வருகின்றனர். தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பீட்ரூட் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். பீட்ரூட் விளைந்து அறுவடைக்கு தயாரானதை அடுத்து விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மார்க்கெட்டில் பீட்ரூட்டுக்கான ெகாள்முதல் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பீட்ரூட் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News