உள்ளூர் செய்திகள்

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.

கடலூர் துறைமுகத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2022-12-29 14:26 IST   |   Update On 2022-12-29 14:26:00 IST
ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது

கடலூர்:

மீன்சந்தையில் விற்கப்படும் மீன்கள் நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஒருசில வியாபாரிகள் ரசாயன கலவைகள் பூசி மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது.

இந்த ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன், கடலோர அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சாகர் மித்ரா பணியாளர்கள் அடங்கிய குழு கடலூர் துறைமுகத்தில் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயனக்கலவை ஏதேனும் பூசப்பட்டுள்ளதா? மீன்கள் தரமாக, சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளதா? என மீன்வளத்துறை அதிகாரிள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மீன் மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் மற்றும் ரசாயனம் பூசிய மீன்கள் ஏதும் விற்கப்படவில்லை.

மேலும் மீன்வியாபாரிகளால் தரமற்ற மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து மீன்வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News