அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையான குடிநீர் விநியோகம்
- தூய்மையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார்
- சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
அரியலூர்
அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டும் என்றார் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் அடுத்த வாலாஜா நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஆண்டுக்கு 6 முறை நடத்தப்படும் இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம மக்கள் தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தெரிவித்து, நிவர்த்திக் கொள்ள வேண்டும். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.நெகிழிப் பொருள்கள அனைவரும் தவிர்க்க வேண்டும். சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஊராட்சி நிர்வாகம் இணையவழியிலேú மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்க வேண்டும். கிராம பகுதிகளில் தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதிப் படுத்த வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ,இக்கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட பொருள்கள் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சியர், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்துக்கு வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவர் அபிநயா இளையராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் (பொ) ஆறுமுகம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜித்தா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அன்பரசி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவர் மா.முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அ.அம்பிகா முன்னிலை வகித்தார். எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் தலைவர் சிவா(எ)பரமசிவம் தலைமை வகித்தார். ஓட்டக்கோவில் ஊராட்சியில் தலைவர் செங்கமலை தலைமை வகித்தார். துணைத் தலைவர் ம.செல்வி முன்னிலை வகித்தார். தாமரைக்குளம் ஊராட்சியில் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்தனர்.