உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

அரிவேளூர் சுயம்புநாதர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-07-01 09:21 GMT   |   Update On 2023-07-01 09:21 GMT
  • யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
  • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரிவேளூர் கிராமத்தில் ஆனந்தவள்ளி சமேத சுயம்புநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

மகாவிஷ்ணு இந்த ஊரில் தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்ததால், ஹரிவாசநல்லூர் என்னும் புராதான பெயரை பெற்றுள்ளது.

அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி அரிவேளூர் என்று அழைக்கப்படுகிறது.

பழமை வாய்ந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் 27 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலை மையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் கிராம பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News