உள்ளூர் செய்திகள்

தேவாலா அருகே வீட்டின் குளியல் அறையை இடித்து சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை

Published On 2022-06-22 09:55 GMT   |   Update On 2022-06-22 09:55 GMT
  • வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
  • தினமும் பகல் நேரங்களில் குரங்குகளும், இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்துள்ளது. வாழவயல் கிராமம். இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்ைக எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று வாழவயல் கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. வெகுநேரம் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்த யானை அங்கு வசித்து வரும் முத்தையா என்பவரது வீட்டின் அருகே சென்றது.

பின்னர் அந்த வீட்டில் இருந்த குளியல் அறையை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு முத்தையா மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது யானை நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினரும் விரைந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- தினமும் பகல் நேரங்களில் குரங்குகள் தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியில் வரவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.

எனவே ஊருக்குள் யானை வருவதை தடுக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News