உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் 62 வயது முதியவர் பீர்பாட்டிலால் அடித்து கொலை

Published On 2023-07-30 07:43 GMT   |   Update On 2023-07-30 07:55 GMT
  • மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
  • முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ரெயில்வே சாலை கந்தன் பூங்கா அங்கன்வாடி மையப் பகுதியில் வசித்து வந்தவர் துரை(வயது62). இவர் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சாலையோரம் வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் துரை அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி போலீசுக்கு தகவல்தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து துரையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அருகில் ரத்த கரையும், பீர்பாட்டில் உடைந்தும் கிடந்தது. மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. மேலும் அங்கு உணவு பொட்டலமும் சிதறி கிடந்தது. துரை பழைய பொருட்களை விற்று பணம் வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த போதை கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News