கத்திக்குத்தில் காயமடைந்தவர்களை படத்தில் காணலாம்.
கடையநல்லூர் அருகே பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பேருக்கு கத்திக்குத்து
- காளிதாஸ் தனது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் தாலுகா திரிகூடபுரம் பஞ்சாயத்து காந்தி நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் பஞ்சாயத்தின் 9-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
வாக்குவாதம்
சம்பவத்தன்று இவரும், இவரது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 38) அவருடைய வீட்டின் முன்பு நீண்ட காலமாக எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு திடீரென காணாமல் போய் விட்டதாகவும், இதனை சரி செய்யுமாறும் காளிதாசிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. உடனே வெள்ளத்துரை வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து காளிதாஸ், அவரது சகோதரர் காளிமுத்து மற்றும் உறவினர் கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி கிழித்துள்ளார். இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரையை கைது செய்தனர். மேலும் வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் காளிதாஸ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.