உள்ளூர் செய்திகள்
விபத்து

நெல்லை நான்கு வழி சாலையில் விபத்து- தடுப்பு சுவரில் கார் கவிழ்ந்ததில் வேளாண் அதிகாரி பலி

Published On 2022-06-04 06:39 GMT   |   Update On 2022-06-04 06:39 GMT
நெல்லையில் இன்று அதிகாலையில் நான்கு வழி சாலையில் தடுப்பு சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் வேளாண் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் குருசடி தெற்கு தெருவை சேர்ந்தவர் லூர்து ராயப்பன் (வயது 51). இவருக்கு லீமா என்ற மனைவியும், ஜாய்ஸ் ஏஞ்சல் என்ற மகளும் உள்ளனர்.

லூர்து ராயப்பன் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்ததால் அங்கு மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நாகர்கோவில் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு விழாவிற்காக லீமா தனது மகளுடன் வந்துள்ளார்.

அவர்களை புதுக்கோட்டைக்கு அழைத்து செல்வதற்காக லூர்து ராயப்பன் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சிங்கராயர் மகன் விமல் (26) என்பவரது காரில் அகஸ்தீஸ்வரத்திற்கு சென்றுள்ளார்.

இன்று அதிகாலை நெல்லை ரெட்டியார்பட்டி 4 சாலையில் வந்தபோது கார் எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் லூர்து ராயப்பன் மற்றும் விமல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்தவர்கள் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே லூர்து ராயப்பன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News