உள்ளூர் செய்திகள்
மயிலம் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை பட்டபடிப்புக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை மேலாண்மைத்துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் இணைந்து நடத்திய இளங்கலை மாணவர்களுக்கான முதுகலை பட்டப்படிப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் கான்குயர்-22 என்ற தலைப்பில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் இலக்கிய விமர்சகர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், புட்கிங் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரத்பாபு ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் செந்தில் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியலின் துறைத்தலைவர் மாரியப்பன் மற்றும் முதுகலை மேலாண்மைத்துறையின் துறைத்தலைவர் மதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கல்லூரியின் டீன் ராஜப்பன் நன்றி கூறினார்.