உள்ளூர் செய்திகள்
மனவேதனையில் விஷம் குடித்து மாணவி தற்கொலை முயற்சி

ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர பண வசதி இல்லை: மனவேதனையில் விஷம் குடித்து மாணவி தற்கொலை முயற்சி

Published On 2022-05-31 18:00 IST   |   Update On 2022-05-31 18:00:00 IST
வேதாரண்யம் அருகே ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாத வேதனையில் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பார்வதி. இதில் கிருஷ்ணமூர்த்தி மாற்றுதிறனாளி. பார்வதி விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கீர்த்திகா (வயது 21).

பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் கீர்த்திகா ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார். பிளஸ்-2 முடித்து விட்டு டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட கீர்த்திகாவுக்கு மருத்துவ படிப்பில் சேர போதிய பணம் இல்லை. இதனால் மகளின் லட்சிய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என கவலைபட்ட பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை கொண்டு மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தனர்.

அங்கு 2 ஆண்டுகள் படித்த கீர்த்திகா மேற்கொண்டு படிப்பை தொடர பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பினார். தனது பெற்றோரிடம் எப்படியாவது டாக்டராகி சேவை செய்ய வேண்டும் என கூறிவந்தார்.

இதனால் மகளின் ஆசையை நிறைவேற்ற பெற்றோரும் பல இடங்களில் பணம் கேட்டு பார்த்தனர். மேலும் வங்கியில் கடன் கேட்டும் கொடுக்கவில்லை.

இதனால் தன்னால் டாக்டராகாமல் போய் விடுமோ என எண்ணி மனமுடைந்த மாணவி கீர்த்திகா வீட்டில் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

தனது மகள் படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் என கீர்த்திகாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News