உள்ளூர் செய்திகள்
வாசுதேவநல்லூர் அருகே காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு
வாசுதேவநல்லூர் அருகே காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூருக்கு மேற்கே புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் மேற்கு தொடர்ச்சி மலை செல்லப்புள்ளி மெட்டு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டு தீ பிடித்தது.
காற்று வேகமாக வீசியதால் தீ பரவும் வேகம் மிகவும் அதிகமாகி இருந்தது. காட்டு தீயில் ஏராளமான தாவரங்கள், மூலிகைகள், மூங்கில் மரங்கள் எரிந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் சிவகிரி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய மூன்று வனச்சரகத்திற்கு உட்பட்ட 35 வனக்காவலர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு காட்டுத்தீ அணைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளை வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.