உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை மாவட்டத்தில் 490 போலீசார் பணியிட மாற்றம்

Published On 2022-05-28 09:42 GMT   |   Update On 2022-05-28 09:42 GMT
நெல்லை மாவட்டத்தில் 490 போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து, சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய துணை காவல் சரகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் சுமார் 35 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த போலீஸ் நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போலீசார் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

 சில நேரங்களில் போலீசார் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுப்பது வழக்கத்தில் உண்டு.

 அதன் அடிப்படையில் அவர்கள் கேட்கும் போலீஸ் நிலையங்களில் காலியிடம் இருந்தால் உயரதிகாரிகள் அந்த மனுவை பரிசீலனை செய்து பணியிட மாறுதல் வழங்குவார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக போலீசாரின் இடமாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதனையொட்டி பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணியை முடித்தவர்கள் மற்றும் பணியிட மாறுதல் கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 490 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பிறப்பித்துள்ளார்.

 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார் உடனடியாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News