உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா

Published On 2022-05-25 09:31 GMT   |   Update On 2022-05-25 09:31 GMT
திருமருகல் ஒன்றியத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியத்தில் பனங்குடி, ஏர்வாடி, அம்பல், போலகம், கீழப்பூதனூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஏர்வாடி ஊராட்சியில் திருமருகல் வட்டார ஆத்மா திட்ட குழு தலைவர் செல்வசெங்குட்டவன் தலைமை தாங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒரு ஊராட்சிக்கு 100 விவசாயிகள் விகிதம் 3 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வரப்பு உளுந்து பயறுகள் வழங்கப்பட்டது. 5 விவசாயிகளுக்கு கைத்தறிப்பான்கள் மானியத்திலும், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் உயிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஊராட்சி செயலாளர் சரவணன், ஆத்மா திட்ட குழு உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் கீழப்பூதனூர் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் தலைமையிலும், அம்பல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமையிலும், போலகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News