உள்ளூர் செய்திகள்
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முற்றுகை
கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு
கோவை, மே.24-
கோவை அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் பேராசிரியை ஒருவர் கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் பேராசிரியை முறையாகப் பாடம் எடுப்பது இல்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறியதாவது:-
கடந்த 6 மாதமாக பேராசிரியர் பாடம் எடுக்காமல் உள்ளார். விரைவில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வகுப்புக்கு வருவதில்லை.அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
மேலும் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு வரும் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.