உள்ளூர் செய்திகள்
சோலையாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக, கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
இதனால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர் விட்டு, உற்பத்தி அதிகரித்துள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 55 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், பி.ஏ.பி. திட்டத்திலுள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 10 அடி உயர்ந்து. நேற்று காலை நிலவரப்படி 65.35 அடியாக இருந்தது. இதேபோல, 120அடி உயரமுள்ள ஆழியாறு அணை யின் நீர்மட்டம் 92.40 அடியாகவும், 73 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 45 அடியாகவும் உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் நிலவரப்படி சோலையாறு -20 மி.மீ., பரம்பிக்குளம் - 10, ஆழியாறு - 1.8, வால்பாறை - 19, மேல்நீராறு - 22, கீழ்நீராறு - 22, காடம்பாறை - 4, மணக்கடவு - 9.6, தூணக்கடவு - 4, பெருவாரிப்பள்ளம் - 7, மேல் ஆழியாறு - 4, பொள்ளாச்சி - 7.6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.