உள்ளூர் செய்திகள்
விருதுநகர்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

Published On 2022-05-23 07:16 GMT   |   Update On 2022-05-23 07:21 GMT
அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என விருதுநகர் கலெக்டர் அறிவிப்பு.
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுகன்ய சம்ரிதி திட்டம்    (செல்வமகள் சேமிப்பு திட்டம்) என்பது  பிரதமர்  மோடி யால் ஜனவரி 22-ந் தேதி 2015-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் கணக்கை தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம்.

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கை தொடங்கலாம்.

குறைந்தபட்சமான தொகையாக ரூ. 250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.250இந்த கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். மொத்தம் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதும். 

தற்பொழுது 7.6  சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.இந்த கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு  அளிக்கப்படுகிறது. கணக்கு ஆரம்பித்த தேதியிலிருந்து 21 வருடம் கழித்து கணக்கு முதிர்வடையும். 

மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது  அவரது கணக்கிலுள்ள இருப்புத்தொகையிலிருந்து 50 சதவிகித பணத்தை அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக பெற்றுக்கொள்ளலாம்.

பெண்ணின் திருமணத்திற்கு பிறகு கணக்கு முதிர்வடைவதற்கு முன்பே கணக்கை எந்தவித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.இந்த கணக்கை முதிர்வடைவதற்கு முன், கணக்கை முடித்து முன் முதிர்வு தொகையினை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்   அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று  செல்வ மகள் திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்.

Tags:    

Similar News