உள்ளூர் செய்திகள்
ஓசூர் பி.எம்.சி.டெக் கல்லூரியில் விளையாட்டு விழா
ஓசூர் பி.எம்.சி.டெக் கல்லூரியில் விளையாட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சூளகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக், ஐடிஐ, மற்றும் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தேசிய தடகள குழுத் தலைவரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வாரிய தூதருமான சார்லஸ் பொரோமியோ ஹோலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் சுடர் தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவிற்கு பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் குமார் தலைமை தாங்கினார். அறங்காவலர் மலர், பாலிடெக்னிக் ஐ.டி.ஐ இயக்குனர் பேராசிரியர் சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் மற்றும் ஐடிஐ முதல்வர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
ேமலும் அவர் விளையாட்டு துறையில் சாதித்த தருணங்களையும் நினைவு கூர்ந்து பேசுகையில் விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கு தற்போது அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. படிப்போடு விளையாட்டையும் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு வாழ்க்கையில் தேவையான வெற்றியை தரும் என்று பேசினார்.
இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பல்வேறு வகையான போட்டிகளில் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.
விளையாட்டு விழா ஏற்பாடுகளை பாலிடெக்னிக் உடற்கல்வி இயக்குநர் கைலாசம் மற்றும் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அன்பழகன் செய்திருந்தனர்.