உள்ளூர் செய்திகள்
ஓசூரில், பாலாறு நதி பாதுகாப்பு விழிப்புணர்வு ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓசூர்,
அகில பாரதீய துறவிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் சார்பில் பாலாறு நதி பாதுகாப்பு விழிப்புணர்வு ரதயாத்திரை மற்றும் பாதயாத்திரை, சுவாமி ராமானந்தா, சுவாமி சாஸ்வதானந்தா மற்றும் சுவாமி சிவப்பிரமானந்த சரஸ்வதி ஆகியோர் தலை மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ரத யாத்திரையானது, நேற்று கர்நாடக மாநிலம் நந்தி மலையில் தொடங்கியது. வழியில் ஓசூர் வந்த ரத யாத்திரைக்கு, நதிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தலைவர் டாக்டர் சண்முகவேல் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள மண்டபத்தில், ரதத்திற்கும், பாலாறு அன்னைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, குருமகராஜ் சிவானந்தா வாரியார் சுவாமிகள், ரத மற்றும் பாதயாத்திரை நோக்கம் குறித்து பேசினார். இதில் 10-க்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் நதிகள் பாதுகாப்பு இயக்க செயலாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சுதா நாகராஜன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் நாகராஜ், தொழிலதிபர் நரசிம்மன், பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்களின் செயலாளர் குமார், வக்கீல் ஆனந்த்குமார், போத்திராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஓசூரிலிருந்து புறப்பட்ட ரதயாத்திரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர் காணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களை கடந்து, அடுத்த (ஜூன்) மாதம் 6-ந்தேதி, பாலாறு நதி சங்கமிக்கும் செங்கை மாவட்டம்,கடலூர் சின்னகுப்பத்தில் நிறைவடைகிறது.