உள்ளூர் செய்திகள்
கத்தி குத்து

காவேரிபட்டணம் அருகே பள்ளி வளாகத்தில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து

Published On 2022-05-16 07:08 GMT   |   Update On 2022-05-16 07:08 GMT
காவேரிபட்டணம் அருகே மாங்காய் கொட்டையை தூக்கி எறிந்ததால் ஏற்பட்ட தகராறில் அரசு பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து விழுந்தது.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள தருமன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரவின் குமார் (வயது14). இவர் பன்னிஅள்ளி புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று பிரவின்குமார் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது அவர் மீது உடன் படிக்கும் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் என்கிற சுணில்குமார் ஆகியோர் மாங்காய் கொட்டையை தூக்கி எறிந்தாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சஞ்சய் நண்பர் சுணில்குமார், பிரவின்குமார் செல்போன் எண்ணுக்கு கொலை மிரட்டல் ஆடீயோவை அனுப்பியுள்ளார். இதனால் பயந்து போன அவன் இன்றுகாலை வழக்கம் போல் வந்தான்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் தாங்காத சுணில்குமார் பள்ளி வளாகத்தில் புத்தக பையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவின்குமார் முதுகில் குத்தினார். இதனை பார்த்த சக மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News