உள்ளூர் செய்திகள்
ராயக்கோட்டை அருகே சோகம்: செல்போன் வாங்கி தர மறுத்ததால் மாணவன் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தந்தை செல்போன் வாங்கி தர மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கணம்பட்டியை சேர்ந்த விவசாயி இவரது மகன் ஹரிஷ் (வயது 17). ராயக்கோட்டை தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால் கடந்த 4 மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான். நேற்று முன்தினம் காலை அவரது தந்தை கோவிந்தராஜனிடம் செல்போன் வாங்கித் தருமாறு கூறியதாக தெரிகிறது.
அப்போது கோவிந்தராஜன் செல் போன் வாங்கித் தர முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த ஹரிஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்துவிட்டான்.
இதையடுத்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ் நேற்று பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.