உள்ளூர் செய்திகள்
புலியூர் ஜம்பு ஏரி ரூ.78 லட்சத்துக்கு மீன் குத்தகை ஏலம்
கிருஷ்ணகிரி மாவட்டம், புலியூர் ஜம்பு ஏரி ரூ.78 லட்சத்துக்கு மீன் குத்தகை ஏலம் போனது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் மின்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் காவேரிப்பட்டிணம் பருவதராஜகுல மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஏலம் நடைபெற்றது.
மீன்வளத்துறை உதவி இநக்குநர் ரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மேட்டுபுலியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ரூ.78,00,100 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். சுமார் 4 ஆண்டுகளுக்கான ஏலத்தொகையை நேற்று காவேரிப்பட்டிணம் பருவதராஜகுல மீனவர் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தினார்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இநக்குநர் ரத்தினம் அவர்களிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்திரவுப்படி ஏலம் விடப்பட்டு, தொகையை காவேரிப்பட்டிணம் பருவதராஜகுல மீனவர் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபின் மீண்டும் நீதிமன்ற உத்திரப்படி அடுத்தகட்ட செயல்பாடுகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மீன் ஏலத்தில் இரு பிரிவினருக்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்ற நிலையில் பர்கூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 45 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பிரச்சனை ஏதுமின்றி சமூகமாக ஏலம் நிறைவு பெற்றதால் அனைவரும் நிம்மதியாக சென்றனர். பிரச்சனைக்குரிய மீன் ஏலம் என்பதால் அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை பர்கூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் படம் பிடிக்க கூடாது வெளியே செல்லுங்கள் என தெரிவித்தார். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.