உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் மனு
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
பெல்லாரம்பள்ளி அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலையரசன்த லைமையில் பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை அருகருகில் உள்ளன. முக்கிய சாலையான இப்பகுதி வழியாகத்தான் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் புறநோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், கால்நடை மருத்துவமனைக்கு செல்வோர் அனைவரும் செல்லும் சூழல் உள்ளது.
இதே பகுதியில் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. பள்ளி முடிந்து வீடு செல்லும் மாணவர்களிடம் மது பிரியர்கள் குடி போதையில் தகாத வார்த்தைகள் பேசுவதும், மாணவிகளை கிண்டல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளித் தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் ஒப்புதல் கையெழுத்துடன் வழங்கியுள்ள இந்த மனுவை விசாரித்து டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில்கூ றப்பட்டுள்ளது.