உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தேர்தலுக்கு அஞ்சுபவன் அல்ல- நாராயணசாமி பேச்சு

Published On 2022-05-07 13:55 IST   |   Update On 2022-05-07 13:55:00 IST
கட்சி மாறிகளுக்கு பேச தகுதியில்லை நான் தேர்தலுக்கு அஞ்சுபவன் அல்ல நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா முதல், 2-வது அலையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பல மாநிலங்களில் மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக உத்திரபிரதேசத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் ம் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக கணக்கு தெரிவித்துள்ளது. 

ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் 40 லட்சத்து 27 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உண்மையில் நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணி க்கையை அனைத்துக்கட்சி குழு அமைத்து கண்டறிய வேண்டும். 

சுப்ரீம்கோர்ட்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி அளிக்க கூறியதால் மத்திய அரசு போலியான கணக்கை காட்டியுள்ளது.உள்துறை அமைச்சரின் புதுவை வருகையால் பல மாற்றங்கள் ஏற்படும் என ஆளும்கட்சியினர் தெரிவித்தனர். ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியுள்ளது.

காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களை அடிக்கல் நாட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த ஆட்சி மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். உள்துறை அமைச்சர் வருகையில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றார்கள், ஆனால் காட்சி மாற்றம்கூட நடக்கவில்லை.

புதுவையில் வெடி குண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தோம். முதல்- அமைச்சர் அலுவலகம் உட்பட அமைச்சர்களின் அலுவலகம் புரோக்கர்களின் கூடாரமாக மாறியுள்ளது. 

ஊழல் மலிந்த அரசாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு உள்ளது. 

கலால்துறையில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது. தேர்தல் தோல்வி பயம் காரணமாக நான் தேர்தலில் போட்டியிடவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார். நான் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். 

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றபோதுகூட நான் போட்டியிட்டேன். நான் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. அமைச்சர் நமச்சிவாயம் ஏன் ஏற்கனவே வெற்றி பெற்ற வில்லியனூர் தொகுதியில் போட்டியிடவில்லை. 

வேறு தொகுதியில் போட்டியிட காரணம் என்ன? தோல்வி பயம் காரணமா? அல்லது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லையா? அவர் இதுவரை 5 கட்சிகள் மாறியுள்ளார். 

கட்சி மாறிகளுக்கு காங்கிரசையும், என்னைப்பற்றியும் விமர்சிக்கும் தகுதியில்லை. 

முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு எடுத்த தவறான முடிவுகளால்தான் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போயுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்கும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியது தான் மோடி அரசின் சாதனை. 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News