உள்ளூர் செய்திகள்
குழந்தை

பிறந்து ஒரே நாளான பச்சிளம் ஆண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிச்சென்ற தாய்

Published On 2022-05-05 07:15 GMT   |   Update On 2022-05-05 07:15 GMT
சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து வீசிச்சென்ற கொடூரத்தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

அரியூர் காலனியை சேர்ந்தவர் மங்கைவரம். இவர் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை நகராட்சி பகுதியில் துப்புரவு தொழிலாளியாக கடந்த 7 வருடமாக வேலைசெய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மங்கை வரம் சின்னசுப்புராயப்பிள்ளை லப்போர்த் வீதி சந்திப்பில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

அங்குள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது அங்கு ஒரு கட்டைப்பையில் பிறந்து ஒரே நாளான பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் கிடப்பதை கண்டு மங்கைவரம் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த குழந்தையை தானே வளர்க்க ஆசைப்பட்டு குழந்தையை தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். ஆனால் அந்த குழந்தையின் தொப்புள் கொடியில் ரத்தம் கசிந்ததால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தை குறித்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் விசாரித்த போது மங்கைவரம் நடந்த விவரத்தை எடுத்து கூறினார்.

இதையடுத்து டாக்டர்கள் மங்கைவரத்துக்கு அறிவுரை கூறி அந்த குழந்தையை சிகிச்சைகாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் மங்கைவரம் இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து குப்பை தொட்டியில் வீசிச் சென்ற கொடூரத்தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசிச் சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News