உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழில் முனைவோர் மாநாடு-அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Published On 2022-05-04 14:44 IST   |   Update On 2022-05-04 14:44:00 IST
ஜூன் முதல் வாரம் புதுவையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவையில் தொழிற்சாலைகளுக்கான வரி சலுகை, மானிய  நிறுத்தம் ஆகியவற்றால் பல தொழிற்சாலைகள் இடம் பெயரத்தொடங்கின. இதனால் இளைஞர்களுக்கு  வேலை  இல்லாத சூழல் ஏற்பட்டது. 

புதுவையில்  என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இளைஞர்களுக்கு வேலை தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக காவல்துறையில் 390 பேர் போலீசாராக பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தககட்டமாக  எல்.டி.சி, யூ.டி.சி.   ஸ்டெனோ கிராபர் பணியிடம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதிதாக தொழில்முனைவோரை கவர பலதிட்டங்கள் கொண்டு வர அரசு முடிவு எடுத்தது. குறிப்பாக தொழில்முனைவோர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. புதுவை அரசும் பிரெஞ்சு வர்த்தக சபையும், இணைந்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொழில் முனைவோர் மாநாட்டை இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து நடத்த உள்ளனர்.

ஒட்டல் அக்கார்டில் நடக்கும் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். 
குறிப்பாக பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் தொழில்முனைவோரும், நாடு முழுவதும்  உள்ள தொழில்முனைவோரும் பங்கேற்கிறார்கள்.

இதுபற்றி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுவையில் இளையோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு பொருளாதார மண்டலத்திட்டத்துக்காக சேதராப்பட்டு, கரசூர் பகுதிகளில் 750 ஏக்கர் நிலம் கையகம் செய்யப்பட்டது. இந்த நிலம் அரசிடம்  உள்ளது. இங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. வரும்  ஜூன் முதல் வாரத்தில் தொழில் முனைவோர் மாநாட்டை புதுவையில் நடத்தவுள்ளோம். 

குறிப்பாக ஐ.டி., பார்மாசூட்டிக்கல், ஆட்டோமொபைல் ஆகிய 3 துறைகளுக்கு முக்கியத்துவம் தர உள்ளோம். ஸ்டார்அப் நிறுவனங்களையும் ஊக்குவிக்க உள்ளோம்.  முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதுவையில் வரவேற்பு தருவோம். இதன்மூலம் புதுவையில் இளையோருக்கு ஆயிரக்கணக்கில் வேலை கிடைக்கும்.

இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

Similar News