உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி பசுமாடு சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கியதில் பசுமாடு இறந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் அடுத்துள்ள சித்த லிங்க கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் உளிரன். இவரது மனைவி நஞ்சம்மா என்பவருக்கு தமிழக அரசால் பசுமாடு ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.
அந்த மாட்டை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மதியம் ஒரு செடியில் பசு மாட்டை கட்டி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
மீண்டும் பசுமாடு பார்ப்பதற்காக சென்றபோது யானையின் பிளறல் சத்தம் கேட்டு பயந்து நஞ்சம்மா வீட்டிற்கு வந்து கணவர் மட்டும் உறவினர்களை அழைத்து கொண்டு அப்பகுதிக்கு சென்றுள்ளார் . அப்போது யானை தாக்கி பசுமாடு உயிரிழந்த நிலையில் ஒடையில் கிடந்தது. இதனை பார்த்த நஞ்சம்மா கதறி அழுதார்.
இதுபற்றி தகவலறிந்த தேன்கனிகோட்டை வனசரகர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திறகு சென்று பலியான மாட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் ஒற்றை யானை கிராமத்திற்கு வராதவாறு வனப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஒற்றை யானை தாக்கி பசுமாடு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.